read.cash Log in
@Muthuking

Jeyakandhan Eluthum Arasiyalum Tamil Part 2

இசையைப் பற்றிப் பேசுவதென்பது பல தளங்களில் நிகழக் கூடிய ஒன்று. தி.ஜா இசையை பற்றிப் பேசும் முறை ஒரு ஆரம்ப நிலையே. ராகங்களைக் குறிப்பது, ஒரு ஆலாபனையை சிலாகிப்பது, ஸ்ருதி மீட்டலில் திளைப்பதெல்லாம் ஒரு ஆரம்ப நிலை ரசிகனுக்கே உரியது. கர்நாடக சங்கீத விற்பண்ணர்கள் பலரும், ஜாம்பவான்கள் உட்பட, ரசிகர்களும் அந்த நிலையில் தான் இன்று வரை இருக்கிறார்கள். இசையென்பது ஒரு கலை அதற்கு மற்றக் கலைகளின் கூறுகள் உள்ளன, சமகால அரசியலைப் பேசுவது உட்பட, என்பதை மேற்கத்திய செவ்வியல் இசையை நன்கறிந்தவர்கள் புரிந்துக் கொள்வார்கள். அத்தகையப் புரிதலை ஜெயகாந்தன் சாரங்கனின் வாயிலாக சொல்லியிருப்பார். அதனாலேயே அந்த நாவல் இன்று வரை சர்ச்சைக்குள்ளானது, கர்நாடக சங்கீத பிரியர்களுக்கு அந்நாவல் மற்றும் அது இசைக்குறித்து வைக்கும் விவாதங்கள் எட்டிக்காயாக கசந்ததால் அந்நாவலை ஏற்க மறுத்ததோடல்லாமல் அதன் தத்துவ விவாதங்களையே அதன் குறைகளாகக் கூறுகிறார்கள். இவர்கள் தாமஸ் மானின் ‘Faust’ படித்தால் என்ன சொல்லுவார்களோ? தவறிழைப்பதும் மன்னிப்பதும் அவர் கதைகளின் மற்றொரு முக்கியமான கூறு. கதையில் முக்கியமானத் தருணத்தில் மன்னிப்பு என்கிற கோட்பாட்டை வலியுறுத்துவார். ஏதோ ஒரு கனத்தில் தன் வசமிழந்துவிடும் மனைவியைக் கணவன் என்ன செய்வது என்றக் கேள்விக்கு ‘வெறுக்கவே முடியாத அளவுக்கு அன்பு செய்துவிட்ட ஒருவனால் வேறென்ன செய்ய முடியும்’ அவளை மன்னித்து ஏற்றுக் கொள்வதைவிட' என்று தன் கதாபாத்திரனூடாகப் பதில் சொன்னார். அந்தத் தவறு மீண்டும் மீண்டும் நடந்தால் என்னச் செய்வது என்கிற குதர்க்கமானக் கேள்விக்கு, “அம்மா நான் தவறிழிப்பதையே வாழ்க்கையாகக் கொண்டவர்களைப் பற்றிச் சொல்லவில்லை” என்றார். ‘தவறுகள் குற்றங்களல்ல’ கதையின் கருவும் மன்னிப்பே. பிராமண கதாபாத்திரங்களையேக் கொண்டு பெரும்பாலும் கதைச் சொல்லும் ஜெயகாந்தன் இக்கதைக்கு கிறிஸ்தவ பெண்ணை பயன்படுத்தியிருப்பார். அக்கதையில் அத்துமீறி அப்பெண்ணிடம் நடந்துக் கொள்ளும் ஒரு மேலாளர் தன் தவறுணர்ந்து மன்னிப்புக் கோர அப்பெண்ணின் கிறிஸ்தவப் பின்னனியை வைத்து தன் செய்கைக்கு வருத்தம் தெரிவிப்பார்.

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.