Sirukathaikal Moondru Tamil 8
வீட்டுக்குள் இருந்து அழுகையோசை கேட்டுக்கொண்டே இருந்தது. அம்மாவின் அழுகை மட்டுமல்ல. நிறைய பெண்களின் அழுகை. “நான் வீட்டுக்குப் போறேன்” என்று லாசர் சொன்னான். அங்கே அத்தனை பரபரப்பாக இருக்கும்போது அப்படி விலகி நிற்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. ”சின்னப்பிள்ளைக அங்க போகப்பிடாது”என்றாள் மேரியக்கா. “ஏன்?” என்று அவன் கேட்டான். “கர்த்தருக்கு பிடிக்காது” என்றாள். “ஆமா, கர்த்தருக்குப் பிடிக்காது” என்று அவன் சொன்னான். கர்த்தருக்குப் பிடிக்காதவற்றை அவன் செய்வதில்லை. அவள் “கருப்பட்டி வேணுமா?” என்றாள்.அவனுக்கு அப்படி நிறைய கருப்பட்டி கிடைப்பதில்லை. சாதாரண நாட்களில் மேரியக்கா கருப்பட்டி கேட்டாலே அடிக்க வருவாள். அவள் அப்போது அழகாக தெரிந்தாள். அவளுடைய பற்கள் வெண்மையானவை, ஈறுகள் செங்கல்நிறத்தில் இருந்தன. அவளுடைய கழுத்தும் தோளும் கருமையாக பளபளப்பாக இருந்தன.
No comments yet