Sirukathaikal Moondru Tamil Part 8
கிழவி “ஏசுவுக்க சித்தம்… நாம என்ன செய்யுகது? குட்டி பாவக்கறையில்லாம பரலோகம் போறா” என்றாள். வீட்டுக்குள் இருந்து வந்த நேசம் அத்தை லாசரின் கையைப் பிடித்து கூட்டிச்சென்று அவள் மகள் மேரியக்காவிடம் கொடுத்து “கொண்டுட்டுப்போய் நம்ம வீட்டிலே வச்சுக்க குட்டி…வல்லதும் திங்கக்குடு”என்றாள் செல்லும்போது லாசர் “குட்டிக்கு என்ன தீனம்?” என்றான். “ஒண்ணுமில்லை , பிறவு சொல்லுதேன்” என்றாள் மேரியக்கா. “குட்டி கர்த்தர்கிட்ட போச்சுதா?” என்று அவன் கேட்டான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “குட்டிய இனி பாக்கணுமானா நாமளும் கர்த்தர்கிட்ட போகணுமா?” என்று அவன் கேட்டான். “சும்மா இருலே” என்றாள் மேரியக்கா மேரியக்கா அவனுக்கு சுட்ட பனம்பழமும் கருப்பட்டியும் தந்தாள். அவன் பனைநாரை சப்பியபடி அவர்கள் வீட்டு திண்ணையில் நின்றுகொண்டு தன் வீட்டில் ஊரிலுள்ளவர்கள் அனைவரும் கூடியிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தான். திருக்கோயிலில் இருந்து ஞானம் உபதேசியார் நீண்ட அங்கியுடன் வந்தார். அவருக்கு அமர்வதற்காக ஜார்ஜ் வாத்தியார் வீட்டிலிருந்து நாற்காலி கொண்டுவந்து போட்டார்கள்.
No comments yet