read.cash Log in
@Muthuking

Jeyakandhan Eluthum Arasiyalum Tamil Part 1

பொது வாழ்வில் ஈடுபட்ட மனிதன் இறந்தாலும் விமர்சனத்திற்குட்பட்டவனே என்று நமக்கு சொல்லிக் கொடுத்தது ஜெயகாந்தன். ஒருவர் மரணமெய்திவிட்டால் ‘அவர் எழுதிய குப்பைகளெல்லாம் குறுக்கத்திப் பூக்களாகிவிடுமா’ என்று இரங்கல் கூட்டத்தில் கேட்டாலும் தவறில்லை என்று அறிவுறுத்தியவர் ஜெயகாந்தன். தமிழ் இலக்கியம், அரசியல், சினிமா மற்றும் வரலாற்றில் ஜெயகாந்தனின் இடம் என்ன என்பதை அவர் வழியிலேயே பாரபட்சமில்லாமல் பார்க்கலாமே. **பாரீஸுக்குப் போ** ஜெயகாந்தனின் படைப்புலகுக்குள் நான் நுழைந்த நுழைவாயில் ‘பாரீஸுக்கு போ’. படைப்பாளியாக அவரின் பலம் மற்றும் பலவீனம் தெளிவாகத் தெரியும் படைப்பு அது. வெகுஜனப் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்ததால் அதற்கே உரித்தான திடுக் திருப்பங்கள், நேரிடையானப் பாத்திரப் படைப்பு, எளிமையான கதைச் சொல்லல், கொஞ்சம் அங்குமிங்குமாக அலைந்தக் கதை, கடைசியாக ஒரு கிளைமாக்ஸ் ஆனால் செறிவான தத்துவ விசாரணைகள் ஊடும் பாவுமாய் அந்தக் கதைக்கு ஒரு ஜெயகாந்தன் முத்திரையைக் கொடுத்தொருக்கும். மோக முள்ளில் ‘integral’ என்று சொல்ல முடியாத இசை பாரீஸுக்கு போவில் பிரிக்கமுடியாமல் கதையோடு பின்னிப் பினைந்து ஊடாடுயிருக்கும். பாபு ஒரு சிறந்த மேஸ்திரியாகவோ, மருத்துவராகவோ ஆவதற்கு முயல்பவனாகவோ வைத்துக் கொண்டாலும் அந்தக் கதையைச் சிதையாமல் சொல்ல முடியும். பாரீஸுக்கு போ அப்படியல்ல. கர்நாடக சங்கீதத்தில் மட்டுமே ஊறித்திளைக்கும் தந்தைக்கும் பாரீஸில் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக்கழித்துவிட்ட கர்நாடக சங்கீதத்திலும் மேற்கத்திய செவ்வியல் இசையிலும் தேர்ச்சிப் பெற்ற மகனும் மோதும் பண்பாட்டு தளமாக இசையே இருக்கும். ஜெயகாந்தனுக்கு மேற்கத்திய செவ்வியல் இசையிலும் நல்ல அறிமுகமுண்டு அது இக்கதையில் துல்லியமாகத் துலங்கும்.

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.